மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, February 13, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் 5(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1)

எனது தாத்தாவின் மருத்துவப் பொக்கிஷங்களில் பல புத்தகங்கள் உள்ளன.அவற்றில் மிகச் சிலவற்றையே வாசக அன்பர்களாகிய உங்களுக்கு இது வரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.மேலும் ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

இது என் தாத்தாவின் சொந்தக் கையெழுத்தில் கடுக்காய் மையினால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியில் உள்ள விடயங்களை விளக்கங்களுடன் தர இருக்கிறேன்.

அந்த நூலின் பெயர் ''கடுக்காய் பிரபாவ போதினி''.
கடுக்காய் பிரபாவ போதினி
கடுக்காயும் தாயும் கருதிலொ ன்றென்றாலும்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீர்-கடுக்காய்நோ
யோட்டியுடற்று மற்றன்னையோ சுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து.

விளக்கம்;-கடுக்காயும் தாயும் ஒன்று என்றாலும், கடுக்காய் தாயைவிட ஒரு படி மேலாக கருதப்படும். எவ்வாறென்றால் அன்னை சுவையான உணவை மட்டுமே ஊட்டுவாள்.தாய்க்கு இல்லாத தகுதியான நோய் போக்கும் சக்தி இந்தக் கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காயை கிரமப் பிரகாரம் சாப்பிட்டு வருவது நோயணுகா விதிகளில் ஒன்று.

பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒரு வகையாகக் கருதப்படுகிறது.தேவ வைத்தியரான தன்வந்திரி பகவான்,கடுக்காயை எப்போதும் தம்மிடம் வைத்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.வட மொழியான சமஸ்கிருதத்தில் கடுக்காய்க்கு அரிதகி என்று பெயருண்டாவற்கு காரணம் அது எல்லா வியாதிகளையும் நீக்குகிறது என்பதேயாகும்.

இன்னும் இதைப் பற்றி கடுக்காய்ப் பிரபாவ போதினியிற் சொல்லப்பட்டிருப்பதாவது,
சுவை ஆறுவகையென்பது பிரசித்தம்.

ஆனால் கடுக்காயின் சுவை ஐந்தாகும்,அவை தித்திப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரைப்பு, ஆகிய ஐந்து வகைக் கடுக்காய்கள் இருக்கின்றன.உவர்ப்பு வகைக் கடுக்காய் மாத்திரமில்லை.

இங்கு சர்வ தயாபரனான கடவுளின் அற்புதமான படைப்பின் ஏற்பாட்டைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். கடுக்காயானது அதி மேலான குணங்களையுடையது. அதில் துவர்ப்பானது கண்வியாதி, இந்திரிய விருத்தி, இரத்த விருத்தி ஆகிய வகைகளுக்கு விரோதஞ் செய்யத் தக்கது.

கடுக்காயோ கண்ரோகம் முதலியவைகளுக்கு சஞ்சீவிக் கொப்பானது. ஆகையால் ஒன்றுக்கொன்று விரோத குணமுள்ளவை முற்றும் ஒன்றாக இருக்கக் கூடாது என்னும் ஏற்பாட்டிற்காகவே உவர்ப்பு வகைக் கடுக்காயை இயற்கையே உருவாக்கவில்லை போலும்.         

''கடுக்காய் பிரபாவ போதினி'' பற்றி இனி நான்கைந்து பதிவுகள் வரலாம்.இனி இது தொடராக வெளி வரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

6 comments:

  1. அருமை,அருமை மேலும் தொடருங்கள்

    ReplyDelete
  2. சாமீ ஜி
    நான் தொடர்ந்து இரண்டு மாதமாக கடுக்காய்
    பொடி செய்து இரவு சாப்பிடுகிறேன்

    இதைப்பற்றி தங்களிடம் கேட்க வேண்டும் என்று
    நினைத்தேன் அதற்குள் பதிவிட்டது ரொம்ப நன்றி

    இன்னும் கடுக்காயின் சிறப்பினை பற்றி முழுமையாக
    தெரிந்து கொள்ள ஆசை

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஆதிசைவர் அவர்களே,
    தங்கள் பாராட்டுரைக்கு நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கடுக்காயின் புகழ் இனி கடுக்காய் பிரபாவ போதினியில் தொடரும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அருமையான பதிவுகள்.தொடர்க.

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு PANNEERSELVAM அவர்களே,
    உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்