மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, September 25, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 44)ஞானம் 2


ஞானம் என்றால் என்ன?????(பாகம்2):-

அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.


மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம்(42),ஞானம் என்றால் என்ன? என்ற பதிவை படித்துவிட்டு இந்தப் பதிவுக்கு வந்தால் நன்கு புரியும்.


சிவஞான சித்தியாரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்,
""திடம் இது பூஜை ஜபமும் தியானம்
  உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
  உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீ பற""
என்றும் 
""சன்மார்க்கம் சக மார்க்கம் சற்புத்திர மார்க்கந்
  தாத மார்க்கம் என்றும் சங்கரனை அடையும் 
  நன்மார்க்கம் நாலவை தாம்""
என்றும் சிவ ஞான சித்தியாரில் குறிப்பிடுகின்றார்.


1)சரியை-தாசமார்க்கம்-சாலோகம்-திருநாவுக்கரசர்
2)கிரியை-சற்புத்திர மார்க்கம்-சாமீபம்-திருஞான சம்பந்தர்
3)யோகம்-சக மார்க்கம்-சாரூபம்-சுந்தரர்
4)ஞானம்-சன்மார்க்கம்-சாயுச்சியம்-மாணிக்கவாசகர் குருசிஷ்ய மார்க்கம் என்றும் கூறுவார்கள்


சாலோகம் என்பது நாம் இப்போது செத்துக் கொண்டிருக்கிறோமே (சா+லோகம்) அந்த உலகமே சாலோகம்,சாமீபம் என்பது இறைவனுக்கு சமீபமாக(அருகாமை) செல்வது,சாரூபம் என்பது இறைவன் ரூபமாகவே ஆவது(இறை சக்தியை அடைவது),சாயுச்சியம்(இறையே நான் எனும் நிலை அடைவது) என்பது இறைத்தன்மையின் உச்சியை அடைவது.அதுவே முத்தீ(மூன்று தீ) அதுவே ஜீவன் முக்தி.


விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனி போல் "அன்றோ பராபரமே"


என்று தாயுமானவர் கூறியுள்ளார்.அதாவது ஞானம் என்ற படிப்பில்,சரியை முதல் வகுப்பு,கிரியை இரண்டாம் வகுப்பு,யோகம் நான்காம் வகுப்பு.நான்காம் வகுப்பான ஞானம் கடைசி வகுப்பு.இதில் தேர்ந்தால் முக்தி.


யோக மார்க்கம்.(சக மார்க்கம்):-
இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகுவதே சக மார்க்கம் அல்லது யோக மார்க்கம் என்று அழைக்கப்படுவது.


அதாவது யோகம் என்பது {தச வாயுக்களையும் (பிராணனையும், உப பிராணன்களையும்)} பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி முழு ஜோதியை நினைவிலும், கனவிலும் நினைத்து இருத்தல். இது சக மார்க்கம்(தோழ நெறி). இறைவன் எனது தோழன் என்றால் இயற்கையின் அனைத்து விதி முறைகளும் எனக்காக தளர்த்தப்படும் மீறப்படும்.


இந்த நிலைக்கு எடுத்துக் காட்டு சுந்தரர்,மற்றுள்ள ஞானியர்,யோகியர்,சித்தர்கள்.



 


ஞான மார்க்கம்.(சன்மார்க்கம் மார்க்கம்):-
இறைவனுடன் இறைவனுக்கு மற்றோர் இறை போல பழகுவதே சன்மார்க்கம் என்ற ஞான மார்க்கம்.அல்லது குரு சிஷ்ய மார்க்கமென்றும் கூறுவார்கள்.


புறத்தொழில்,அகத் தொழில் இன்றி அறிவு மாத்திரமாகவே செயல்படும் வழிபாடு ஞானம்.
இதன் மூலம் நிச்சயமாகச் சொல்லக் கூடியது என்னென்றால்,பூஜை,ஜெபம்,தியானம், என்பன மூன்றும் முறையே மனம், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும் தொழில்கள்தான்.மேலும் அவை முறையே ஒன்றைவிட ஒன்று உயர்வானது.அதாவது மூன்றில் தியானமே உயர்வானது.அதிலும் உயர்வானது ஞானமே.



இப்படி உயர்வான ஞானத்தைப் போதித்த மாணிக்கவாசகரானாலும் சரி, திருஅருட்பிரகாச வள்ளலார் ஆனாலும் சரி இறைவனை அருவமாகவும் வழிபடலாம் என்ற கொள்கை, கோவிலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பிடிக்காததால் 63 நாயன்மார்களில் மூவர் முதலி என்று ஞான சம்மந்தர்,அப்பர்,திருநாவுக்கரசர் என்ற மூவரைத்தான் அழைப்பார்கள்.மாணிக்க வாசகரை முக்கியப்படுத்த மாட்டார்கள்.மேலும் மாணிக்க வாசகர் எழுதிய முழுதும் ஞானத்தைச் சொல்கின்ற பழக்கத்தில் இல்லாத ஒரு பதிகமான ஞானத்தாழிசை என்ற பதிகத்தை அடுத்து வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.


இறைவனுடன் இவ்வாறான முறைகளில் பழகி ஞானம் அடைந்ததுடன்,ஞானம் அடைந்த வயதுகளை கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.


"அப்பருக்கு என்பத்தொன்று அருள் வாதவூரருக்கு
செப்பிய நாலெட்டில் தெய்வீகம் :-இப்புவியில்
சுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்மந்தருக்கு
அந்தம் பதினாறு என் றறி"


அப்பருக்கு எண்பத்தோரு வயதிலும்,வாதவூரரான மாணிக்க வாசகருக்கு 32 வயதிலும்,சுந்தரருக்கு 18 வயதிலும், ஞான சம்மந்தருக்கு 16 வயதிலும் இறைவன் முக்தி அளித்தான்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Monday, September 19, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 43)பஞ்ச கல்பம்

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்ணொளி வழங்கும் சித்தர்களின் பஞ்ச கல்பம்
அன்புள்ள பதிவு வாசகர்களே,
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும்,பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது.மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும்.


கண் பிராணன் நின்று உலவும் இடம்,மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது.நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள்.ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது.உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை,தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன.கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம்,தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம்,வாதம்,சன்னி,பல கர்ம வியாதிகள்,தோல் வியாதிகள்,மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது.இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.


இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.


இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம்.பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர் இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன்,நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.


சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதால் ஞானத்திற்கும் உதவுகிறது.இப்படிப்பட்ட ஓர் அற்புத மருந்தை உங்களுக்கு தெரிவிப்பதற்கு ஆண்டவன் எனக்கு கிருபை செய்துள்ளான்.அனைவரும் பெற்று ஆனந்தித்து மகிழ்வீர்களாக.
 பஞ்ச கல்பம்(பதார்த்த குண விளக்கம்)
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும். 
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்


மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.


மேற்படி முறை பதார்த்த குண விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.வள்ளலார் கண்ட வேறு முறை பஞ்ச கல்பம் இதோ கீழே>>
வள்ளலார் பஞ்ச கல்பம்
1)கசகசா
2)பாதாம் பருப்பு
3)கொப்பரைத் தேங்காய்
4)மிளகு சுத்தி செய்தது
5)சீரகம் சுத்தி செய்தது


மேற்கண்ட பொருள்களை சம எடை எடுத்து கலந்து பொடி செய்து வைத்துக் கொண்டு பாலில் அரைத்து காய்ச்சி தேய்த்து குளிக்க வேண்டும். இப்படிச் செய்து வர கண்ணொளி பெருகி பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் கண்பார்வைத்திறன் உண்டாகும். ஆயுள் நீளும். நல்ல ஞானம் உண்டாகும். சஹஸ்ராரச் சக்கரம் வலுவடையும். மேலும் நாம் ஞான வழியில் முயற்சி செய்ய ஞானப் பால் சுரக்கும். உடலெங்கும் அவ்வமுதம் கலக்க உடல் அழியாது.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment