மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, November 27, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(9)

கார்த்திகை மாதமிது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் ஏற்றிக் கொண்டாடும் காலம்.இது எதற்காக ஏற்றப்படுகிறது என்ற விவரம் ஏற்கெனவே http://machamuni.blogspot.com/2010/11/3.html என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


இப்போது குறிப்பிடுவது சொக்கப்பன் கொளுத்துவது என்று ஒரு சடங்காக எல்லா சிவன் கோவில்,முருகன் கோவில் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.பொருள் புரியாமல் நடத்தப்படும் சடங்குகள் நமது தமிழர் வாழ்வியலில் நிறைய ஆகிவிட்டன.
  
அதை விளக்கவே இந்தப் பதிவு.சோத்துக்குள்ளே இருக்கிறான் சொக்கன் என்பார்கள்.சொக்கன் என்றால் தூக்கம் என்று ஒரு பொருள்.இன்னொரு பொருள் சொக்கநாதர் ஆகிய இறைவன்.


சொக்கப்பன் ஆன தூக்கத்தை கொளுத்துவதே சொக்கப்பன் கொளுத்துவது.இதையே சித்தர்கள் 'தூங்காமல் தூங்கி சுகம் பெருவது எக்காலம்' என்று இறைவனிடம் வரம் கேட்டு வாடுகிறார்கள்.
 
ஒருவன் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்கிறானோ அவனுக்கு பலம் அதிகம்.இராவணன் மகனான இந்திரஜித்து எவனொருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனே இந்திரஜித்தை கொல்வான்,என்ற வரம் பெற்றவன். இலக்குவன் தன் அண்ணனுக்கும்,அண்ணிக்கும் 14 ஆண்டுகள் காவலிருக்கும் பொருட்டு தன் மனைவியான ஊர்மிளையிடம் தன் உறக்கத்தை கொடுத்துவிட்டு போனதாக கதை உண்டு(14 ஆண்டுகள் ஊர்மிளை தூங்கிக் கொண்டே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது).அதன் காரணமாக 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து பின் அது தந்த பலத்தின் காரணமாக(இலக்குவனை கொல்ல இந்திரஜித்து நிகும்பலையில் யாகம் செய்தும்) இந்திரஜித்தை, இலக்குவன் கொன்றார்.


திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளலார் எவன் ஒருவன் தினம் ஒரு மணிநேரம் மட்டும் உறங்குகின்றானோ அவன் ஆயிரம் வருடம் உயிர் வாழ்வான் என்கிறார்.


தூக்கத்தின் போது மூச்சு மிக அதிகமாக ஒடி உயிர் அழிகிறது.எனவே தூங்கும் போது மூச்சு அதிகம் ஓடி (நிமிடத்துக்கு 64 மூச்சு வீதம் ஓடி)ஆயுள் விரயமாகி நாம் மடிகின்றோம்.


இதையே அகத்தியர்

உண்ணும்போது உயிர் எழுத்தை உயரே வாங்கு,
உறங்குகின்ற போதெல்லாம் அதுவே ஆகும்,
பெண்ணின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம்
பேணி வலம் மேல்தூக்கி அவத்தில் நில்லு
தின்னும் காய் இலை மருந்து இதுவேயாகும்
தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார் 
மண்ணூழி காலம் மட்டும் வாழ்வார்தாமே
றலி கையில் அகப்படுவார் மாட்டர்தாமே.
          -அகத்தியர்-
உண்ணும்போதும் உயிர் எழுத்தான மூச்சுக் காற்றை அதிகமாக ஓடவிடாமல் பிடித்து இழுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.உறங்குகின்ற போதும் இப்படியே இருக்க வேண்டும்.பெண்ணிடம் சம்போகத்தில் ஈடுபடும்போதும் இதே போல் மூச்சைப் பேணி மேல் தூக்கி அவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உயிர் அழியாமல் இருக்க தின்னக் கூடிய காயகற்பமாகிய காய் இலை மருந்து இதுவேயாகும். தினந்தோறும் இது போல் உங்களால் செலுத்த முடியுமானால் இந்த மண் உள்ள வரையில் உயிர் வாழலாம்.மறலி என்றால் எமன்,அந்த எமன் கையில் அகப்பட்டு உயிரை விட மாட்டீர்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.

வள்ளலார் இதை

பசித்திரு!
தனித்திரு!
விழித்திரு!

பசி ஒரு திரு(திரு என்றால் செல்வம்),தனித்திரு (தனிமையாக இருப்பது ஒரு செல்வம்,இதையே அவ்வையார் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று தனிமையைப் போற்றுகிறார்),விழித்திரு(விழிப்போடு இருப்பது ஒரு செல்வம்).

பசியோடு இருந்தால் தூக்கம் வராது,விழிப்போடு இருப்பதான செல்வம் தானே வரும்.தனிமையான செல்வத்தை ஏற்படுத்திக் கொண்டு இறையை தியானம் செய்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.(இதையே அவ்வையார் அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் என்கிறார்)

எனவே தூக்கத்தை குறைக்கும் வழி அறிந்து குறைத்தால் மூச்சு விரயம் குறைந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

  1. அய்யோ இறைவா!!
    நானெல்லாம் இரவு 2 மணிக்கு தூங்கி
    9 வரை தூங்குகிறேனே
    நிச்சயமாக இனி தூங்கும் நேரத்தை குறைத்து கொள்கிறேன் சாமீ ஜி

    உங்கள் அன்பன் ஷரீப்

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,
    தங்கள் மூச்சை வைத்துத்தான் ஆயுள் என்னும் போது தூங்குவதைக் குறைத்து ஆயுள் பெருக்குவோம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்